ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி
வேதம் புரிந்த சிறை விடுவித்தீரோ பரனே
ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப்
பாவத்துக்காகப் பழியானீரோ பரனே
வேத கற்பனையனைத்தும் மீறிநரர் புரிந்த
பாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே
தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்து
மைந்தரை மீட்கமனம் வைத்தீரோ பரனே
சிலுவை சுமைபொறாமல் தியங்கித் தரையில் விழக்
கொலைஞர் அடர்ந்து கோட்டி கொண்டாரோ பரனே
வலிய பாவத்தை நீக்கி மனுடரை ஈடேற்றிச்
சிலுவை சுமந்திறங்கித் திகைத்தீரோ பரனே
சென்னியில் தைத்தமுடிச்சிலுவையின் பாரத்தினால்
உன்னியழுந்தத் துயர் உற்றீரோ பரனே
வடியும் உதிரமோட மருகித் தவித்துவாடிக்
கொடிய குருசில் கொலையுண்டீரோ பரனே
வானம் புவிபடைத்த வல்லமைப் பிதாவின் மைந்தர்
ஈனக்கொலைஞர் கையாலிறந்தீரோ பரனே
சங்கையின் ராஜாவே சத்ய அனாதி தேவே
பங்கப்பட்டுமடிப் பட்டீரோ பரனே
No comments:
Post a Comment